Sunday, 26 December 2010

கடமை உணர்ச்சி

 
முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலை பற்றிப் பேசும் ஒரு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.

அங்கு உயரதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்களும் புள்ளி விபரங்களும் எல்லோரினதும் கவனத்தை ஈர்த்தன.

அவர் தனது உரையில் நகைச்சுவையாகக் குறிப்பிட்ட ஒரு விடயத்தை உங்களிடம் சொல்ல நினைக்கிறேன்.

ஒரு முஸ்லிம் மாணவனின் தந்தையைப் பார்த்து ஆசிரியர் ஒருவர் "ஏன் உங்கள் மகன் முட்டை வியாபாரம் செய்கிறான்?" எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்தத் தந்தையோ " நீங்கள் அவனுக்கு  கொடுத்த முட்டைகளைத்தான் அப்போது அவன் விற்றுக் கொண்டிருக்கிறான்" என்றாராம்.

நீங்கள் ஒழுங்காகப் படிப்பிக்காததால்தான் அவன் இன்று முட்டை வியாபாரம் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் அந்தத் தந்தை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்.

அந்த அதிகாரி இன்னுமொரு விடயத்தையும் சொன்னார்.

அவர் அண்மையில் ஒரு சிங்கள பாடசாலைக்கு மாலை வேளையில் சென்றிருக்கிறார். அங்கு ஒரு வகுப்பறையில் குழந்தை ஒன்று அழும் சப்தம் கேட்டிருக்கிறது. ஆச்சரியப்பட்டு போய்ப்பார்த்தபோது அங்கு ஒரு ஆசிரியை தனது கைக் குழந்தையை வைத்துக் கொண்டு பாடம் நடத்திக் கொண்டிருந்தாராம்.

தான் குழந்தையைப் பெறுவதற்காக எடுத்த விடுமுறையில் விடுபட்ட பாடத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே அவர் அவ்வாறு வகுப்பை நடத்தியிருக்கிறார்.

அந்த ஆசிரியையின் கடமை உணர்ச்சி எப்படியிருக்கிறது?

No comments:

Post a Comment