கடந்த வாரம் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவரைச் சந்தித்தேன்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய மேலும் சில பயணிகளுடன் குறித்த சகோதரரும் வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார். வரும் வழியில் களனி பாலத்துக்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இவர்கள் பயணித்த வேன் மறிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை அறிந்து கொண்ட பொலிசார் இவர்களது பைகளை தீவிரமாகச் சோதனையிட்டதுடன் அவற்றிலிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்களை சுருட்டத் தொடங்கியுள்ளனர். குறித்த சகோதரர் கொண்டு வந்த சுமார் 8 கையடக்கத் தொலைபேசிகளில் சிலவற்றையும் பொலிசார் பலவந்தமாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளனர். அத்துடன் வேனில் இருந்தவர்கள் சகலரிடமிருந்தும் வெளிநாட்டு இனிப்புப் பண்டகளையும் வாசனைத் திரவியங்களையும் கூட அவர்களின் அனுமதியின்றியே பொலிசார் எடுத்துக் கொண்டுள்ளனர்.
தனது பொருட்களைத் தருமாறு கேட்டும் பொலிசார் தர மறுத்ததால் உடனடியாகவே `பொக்கற்'றிலிருந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி `இவர் எனது உறவினர்தான்...' எனக் கூறியுள்ளார் அவர். அதன் பின்னர்தான் `சொறி மாத்தையா' எனச் சொல்லி விட்டு கொஞ்சம் டொபிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு வேனை விட்டார்களாம்... பாருங்கள்.... வேலியே பயிரை மேய்கிறது இந்த நாட்டில்....

No comments:
Post a Comment